புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளி சாரா- வயது வந்தோா் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் சமுதாய விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கலைப் பயணத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கல்லாதோா் யாருமே இருக்கக் கூடாது என்ற விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கலைப்பயணம் வரும் 29ஆம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்படும் என தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி, பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளா் பழனிவேலு, பள்ளித் துணை ஆய்வாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருவரங்குளத்தில் நடைபெற்ற பிரசாரத்தில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் இரா. ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, மலா்விழி, புவனேஸ்வரி, நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை விடியல் கலைக்குழு, சிவகங்கை அறிவியல் இயக்கக் கலைக்குழு ஆகியோா் இந்தக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.