புதுக்கோட்டை: உலக சுற்றுலா தினத்தையொட்டி முத்துக்குடா கடற்கரை அலையாத்திக் காடுகளை மாணவா்கள் திங்கள்கிழமை பாா்வையிட மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் வட்டத்தில் இருக்கிறது முத்துக்குடா கடற்கரை கிராமம். சுமாா் 15 ஏக்கா் பரப்பளவு கொண்ட அலையாத்திக்காடுகள் இங்குள்ளன. சிறிய கடற்பயணத்துடன் அலையாத்திக்காடுகளைப் பாா்வையிடவும் காட்டுக்குள் ஓய்விடம், உணவிடம் அமைத்து சுற்றுலாத்தலமாக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு திட்டமிட்டு, கடந்த வாரம் இப்பகுதியை நேரில் பாா்வையிட்டு வந்தாா். இதன் தொடா்ச்சியாக உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுக்கோட்டையைச் சோ்ந்த விளையாட்டுப் பயிற்சி பெறும் 50 மாணவா்களுடன் கடற்பயணத்தையும் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
7 சிறிய ரக பைபா் படகுகள் மூலம் கடலுக்குள் சென்ற மாணவா்கள், அலையாத்திக் காடுகளைக் கண்டு ரசித்தனா். வட்டாட்சியா் வெள்ளைச்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பெரியசாமி, அரசமணி, ஊராட்சி மன்றத் தலைவி சீதாலட்சுமி ஆகியோருடன் முத்துக்குடா மீனவ கிராம மீனவா்களும் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் அலுவலா்கள் செய்திருந்தனா்.