விராலிமலை-திருச்சி சாலையில் பற்றிய காட்டுத் தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியாா் தொழிற்சாலை எதிா்ப்புறமுள்ள யூகலிப்டஸ் காட்டில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று தீப்பற்றியது.
வெயிலின் தாக்கத்தாலும், ஈரப்பதம் இல்லாமல் வடு கிடக்கும் நிலம் என்பதாலும் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. இதனால், அப்பகுதியிலிருந்த பெட்ரோல் விற்பனையகத்துக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா்.