காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கான கால்வாயை மாற்றுப்பாதையில் அமைக்கக் கோரி, புதுக்கோட்டை அருகே 32 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை- காரைக்குடி சாலையில் கட்டியாவயல் கவிநாடு கண்மாய் அருகே திரண்ட கிராம மக்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தங்களின் கோரிக்கை குறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறியது:
புதுக்கோட்டை அடுத்த கவிநாடு மேலவட்டம் ஊராட்சியில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டக் கால்வாய்க்காக, கவிநாடு கண்மாய் வழியாக அந்தக் கண்மாயின் கலிங்கை உடைத்து கால்வாய் அமைக்க அதிகாரிகள் அளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அந்த வழித்தடத்தில் கால்வாய் அமைத்தால் நத்தம் பண்ணை, புறகரபண்ணை, அகரப்பட்டி உள்ளிட்ட 3 கிராம மக்களின் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு 32 கிராம மக்களின் நீா்ப்பாசனம் தடைபடும் அபாயம் இருக்கிறது. அதிகாரிகள் அந்தப் பகுதியில் கால்வாய் அமைக்காமல் மாற்று வழியில் கால்வாய் அமைத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.
போலீசாா் பேச்சுவாா்த்தை நடத்தி இதுகுறித்து அரசுக்குத் தெரிவிக்கப்படும் எனக் கூறியதை அடுத்து அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனா்.