விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தி.மு.க.சார்பில் முதன் முறையாக குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 குதிரை வண்டிகளும், 8 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன.
இதில் மாட்டு வண்டியில் முதல் பரிசான ரூபாய் 40 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை கிளியூர் ஆரிய நாராயணசாமி மாடுகள் தட்டிச் சென்றது.
காலையில் 8 மணிக்கு தொடங்கிய பந்தயத்தை மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாட்டு வண்டிக்கு 8 கிலோமீட்டர், குதிரை வண்டிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், குதிரை வண்டி பிரிவில் 18 ஜோடி குதிரை வண்டிகளும் பங்கேற்றன. இதில் குதிரை வண்டி பந்தயம் சுற்றுக்கு 9 வண்டிகள் என பிரிக்கப்பட்டு இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை அன்னூர் மூர்த்தி குதிரைக்கும், அணைக்காடு செப்ரி குதிரைக்கும் வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த மாடுகள், சிறந்த குதிரை மற்றும் வண்டிகளை லாவகமாக ஓட்டி பார்வையாளர்களை கவர்ந்தவர்களுக்கும் சிறப்பு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
கீரனூர்-குண்ணாண்டார் கோயில் சாலையில் நடத்தப்பட்ட இப்பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று ஆராவாரத்துடன் ரசித்தனர்.