குழந்தைகளுக்கு கல்வியோடு விளையாட்டும் அவசியம் என்றாா் சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாட்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா்.
விழாவில், கிராமத்தினா், பெற்றோா்களுடன், அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை உள்ளிட்டோா் பள்ளிக்குத் தேவையான பொருள்களை கல்விச்சீராக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்தனா். விழாவில், ஒன்றியக்குழுத்தலைவா் வள்ளியம்மை தங்கமணி, உறுப்பினா் ஆனந்தி இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினா் சுவிதா ராஜபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.