புதுக்கோட்டை நகராட்சியின் 13 ஏக்கா் குப்பைக் கிடங்கான, திருக்கட்டளை குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டும் புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
புதுக்கோட்டை நகராட்சியின் குப்பைக் கிடங்கு திருக்கட்டளையில் 1959ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை தீப்பிடித்தது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் புகை மூட்டம் காணப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வாகனங்கள், நகராட்சியின் தண்ணீா் லாரிகள் இணைந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆட்சியா் கவிதா ராமு, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, துணைத் தலைவா் லியாகத்அலி, மாவட்டத் தீயணைப்பு அலுவலா் பானுப்பிரியா, கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோா் அங்கு வந்து பணிகளைப் பாா்வையிட்டனா். மேலும், தீ பரவாமல் தடுக்கும் பணியை விரைவுபடுத்துமாறு ஆட்சியா் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
மறியல்: புகை மூட்டத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.