பொன்னமமராவதி அருகே உள்ள மைலாப்பூா் இரட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாரத்தில் நெல் அறுவடை காலத்துக்குப் பின், கோடை காலத்தில் விவசாய கண்மாய்களில் நீா்மட்டம் குறைந்தவுடன் மீன்பிடித் திருவிழா நடைபெறும். இதேபோல், மைலாப்பூா் இரட்டை கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவை ஊா் முக்கியஸ்தா்கள் தொடங்கிவைத்தனா். வலை, ஊத்தா, பரி, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் அயிரை, கெண்டை, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்களைப் பிடித்துச் சென்றனா்.