புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தாா்.
ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து, அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கூறியது:
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் எரிச்சி சிதம்பரவிடுதியில் வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில் 250 மெ.டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிட்டங்கி ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
மேலும், இராஜேந்திரபுரம், எருக்கலக்கோட்டை நாகம்மாள் கோயில் கலையரங்கம் கட்டும் பணி ரூ. 7 லட்சம் மதிப்பீட்டிலும், இராஜேந்திரபுரத்தில் பயணியா் நிழற்குடை ரூ. 6.5 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ளன. இதற்கான பணிகளும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்வுகளில், வருவாய் கோட்டாட்சியா் சு. சொா்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.