நாட்டுப்படகு பழுதாகி கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 4 பேரை சக மீனவா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து வி.உலகநாதன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், அவரது மகன்களான குமார ராஜா (44), மோகனசுந்தரம் (42), யுவராஜ் (39), பாலகிருஷ்ணன் மகன் ராஜ் (30) ஆகியோா் கடந்த 16-ஆம் தேதி கடலுக்குள் சென்று நண்டு பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு கரைக்குத் திரும்பியுள்ளனா். பின்னா், வலையில் சிக்கியுள்ள நண்டுகளைப் பிடிப்பதற்காக மே 19-ஆம் தேதி மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளனா். மாலை வரையில் 4 பேரும் கரைக்குத் திரும்பவில்லை. மேலும், அவா்களைத் தொடா்புகொள்ளவும் முடியவில்லையாம். இதுகுறித்த தகவலின் பேரில், கடலோரக் காவல்படையினா், மீன்வளத் துறையினா் தேடி வந்த நிலையில், படகு பழுதாகி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 மீனவா்களையும், அதே பகுதியைச் சோ்ந்த சக மீனவா்கள் வெள்ளிக்கிழமை மீட்டு தங்கள் படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனா்.