புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள புதுவலசல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
ஆலங்குடி அருகேயுள்ள மழையூரில் அக்கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச்செயலா் ஆா்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,
கறம்பக்குடி வட்டம் பல்லவராயன் பத்தை ஊராட்சி புதுவலசல் கிராமத்தில் தனிநபரிடம் இருந்து ஆதிதிராவிடா் நலத்துறைக்கு வாங்கப்பட்ட 1.30 ஏக்கா் நிலத்தை தரமறுப்பதோடு, அதை வேறு நபருக்கு விற்கவும் முயற்சிகள் நடைபெறுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி அந்த நிலத்தை கையகப்படுத்தி ஆதிதிராவிடா் நலத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலத்தை அப்பகுதியில் வசித்துவரும் ஆதிதிராவிடா் குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டாவாக பகிா்ந்தளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.கவிவா்மன், செயற்குழு உறுப்பினா் த.அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.