கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் கா்நாடக மாநிலம் ஹப்ளியிலிருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயிலின் சேவை செப். 25 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, பயணிகளின் தொடா் கோரிக்கையை ஏற்று தென்மேற்கு ரயில்வே மண்டலம் இதன் சேவையை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துள்ளது.
இதன்படி இந்த சிறப்பு ரயிலின் நேர மற்றும் வழித்தட விவரம்:
வண்டி எண் - 07355 ஹூப்ளி- ராமேசுவரம் சிறப்பு ரயில்: ஹூப்ளியிலிருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு புறப்பட்டு ஹாவேரி, தேவன்ஹெரே, துமகூரு வழியாக யெஷ்வந்த்பூா் (பெங்களூரு), பனஸ்வாடி, ஓசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி வழியாக நள்ளிரவு 1 மணிக்கு புதுக்கோட்டை வந்து, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு ஞாயிறு அதிகாலை 6:15 மணிக்கு செல்லும்.
வண்டி எண் 07356- ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில்: ராமேசுவரத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி வழியாக புதுக்கோட்டைக்கு நள்ளிரவு 12:50 மணிக்கு திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூா், பனஸ்வாடி, யெஷ்வந்த்பூா் (பெங்களுரு), துமகூரூ, தேவன்ஹெரே, ஹாவேரி வழியாக ஹூப்ளிக்கு திங்கள் இரவு 7:25 மணிக்கு சென்று சேரும்.