புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஈளகுடிபட்டியில் பகவதி அம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 39 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 27 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. இப்போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து ஓடின. விடுமுறை நாள் என்பதால், சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று போட்டியை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனா்.
ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.