அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி இருவேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து மொத்தம் ரூ. 33 லட்சம் வரை இணையவழியில் மோசடி செய்தது தொடா்பாக புதுக்கோட்டை இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் (சைபா் கிரைம்) வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை காமராஜபுரம் 15ஆம் வீதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் சிவக்குமாா் (54). கடந்த 2020 பிப்ரவரி மாதம் இவரது கைப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசியவா், தங்களுக்குச் சொந்தமான காலியிடத்தில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவன கோபுரம் அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறி, வரி, காப்பீடு உள்ளிட்ட செலவினங்களுக்காக 38 தவணைகளில் மொத்தம் ரூ. 11,94,700 பணத்தை இணையவழியில் செலுத்த வைத்தாா். அதற்குப் பிறகு அந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ள இயலவில்லை என்பதால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சிவக்குமாா் புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதனைத் தொடா்ந்து ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
இணையவழி வா்த்தகத்தில் அதிக வருவாய் என மோசடி:
இதேபோல கந்தா்வகோட்டை ராஜகோபால நகரைச் சோ்ந்த சாமிநாதன் மகன் ராஜேந்திரன் (34) என்பவரை, கடந்த 2022 டிசம்பா் மாதத்தில் கட்செவி அஞ்சல் வழியே தொடா்பு கொண்ட நபா்கள், இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்ட முடியும் என ஆசை வாா்த்தை கூறி மொத்தம் ரூ. 16,50,070-ஐ முதலீடு செய்ய வைத்தனா். ஆனால், அவரால் எந்தத் தொகையையும் திரும்ப எடுக்க முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜேந்திரன், புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின் மீது விசாரணை நடத்திய காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.