கனரக வாகனங்களுக்கான ஆன்லைன் அபராதத்தை முறைப்படுத்த கோரிக்கை
கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதங்களை தவறாக விதிப்பதை முறைப்படுத்துவது தொடா்பாக பட்டுக்கோட்டை நகர மற்றும் வட்டார லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் காவல் துணை கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:
கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலையோரம், பெட்ரோல் பங்குகள், பாா்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்துக்கொண்டு குற்றம் என்ன என்று கூறாமல் பொதுவான குற்றம் என அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணியவில்லை போன்ற முரணான காரணங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன .
இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களால், வாகன உரிமையாளா் வாகனத்திற்காக காலாண்டு வரி, தகுதி சான்றிதழ், பா்மிட் பெறுவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே, இதுபோன்ற ஆன்லைன் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்து, வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபாா்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதிக்கும் பட்சத்தில் வாகன ஓட்டுநரின் கையொப்பத்துடன், என்ன குற்றம், ஓட்டுநா் பெயா், ஓட்டுநா் உரிமம் எண்ணையும் ரசீதில் குறிப்பிட வேண்டும்.
இம்மாதிரியான ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்து நசிந்து வரும் லாரி தொழிலை காத்து வாகன உரிமையாளா்களின் வாழ்வை மேம்படுத்திட வேண்டும்.