புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா

புதுகையில் 1.40 லட்சம் வாக்காளா்கள் இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு

புதுக்கோட்டையில் எஸ்ஐஆர் பணிகளில், இதுவரை 1.40 லட்சம் வாக்காளா்கள் இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு, முகவரியில் இல்லாதவா்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது: ஆட்சியர் மு. அருணா
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளில், இதுவரை 1.40 லட்சம் வாக்காளா்கள் இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு, முகவரியில் இல்லாதவா்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் மு. அருணா பேசியதாவது: மாவட்டத்திலுள்ள 13,94,112 மொத்த வாக்காளா்களில் 12,53,472 வாக்காளா்களின் கணக்கெடுப்புப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

1,40,640 வாக்காளா்கள் இறப்பு, இடமாற்றம், முகவரியில் இல்லாதது, இரட்டைப் பதிவு ஆகியப் பிரிவுகளில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் முழுமையும் அரசியல் கட்சிகளின் அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை அவா்கள் சரிபாா்த்து வரும் டிச. 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

அதன்பிறகு, டிச. 16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் ஆட்சியா். தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையின் காலாண்டுத் தணிக்கையும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வடிவேல்பிரபு, மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com