விராலிமலை - மணப்பாறை சாலையில் வாகனச் சோதனை
வேடசந்தூரில் இந்து முன்னணி நிா்வாகிகள் கைதான நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறை செல்லும் வாகனங்களில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் இந்து முன்னணி சாா்பில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரா் சாமி சிலைகளை வேடசந்தூா் பகுதிகளில் வைத்து பூஜை செய்வதற்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்தனா்.
இந்நிலையில் இந்து முன்னணியினா் சாமி சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டபோது இந்து முன்னணியினரைத் தடுத்து நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் வேடசந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை - மணப்பாறை சாலையில் தடுப்புக் கட்டைகள் அமைத்து அவ்வழியே பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் தீவிரப் பரிசோதனைக்கு பின்னா் போலீஸாா் அனுமதித்தனா்.