கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் வரும் 13-ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
பல்வேறு பெருமைகளை கொண்ட இக்கோயிலில் ஆராவமுதன் என்னும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் 1999-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு மகாமக திருவிழா நடைபெறவுள்ளதால், கும்பகோணம் பகுதியில் உள்ள கோயிலில்களில் கும்பாபிஷேகம் நடத்திட ஏதுவாக திருப்பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.
இதன்படி, சாரங்காபணி கோயிலில் கடந்த ஆண்டு ஜூலையில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக தமிழக அரசு ரூ. 1 கோடியும், நன்கொடையாளர்கள் மூலம் ரூ. 1 கோடியும் பெறப்பட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழாவையொட்டி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்படும்; பின்னர், வரும் 10-ம் தேதி காலை 8 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் கொண்டு வந்து யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கப்படும். ஆறுகால யாகசாலை பூஜைகளுக்கு பிறகு, வரும் 13-ம் தேதி காலை 5 மணி முதல் 6 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.