கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவிஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகள் மடத்தில் அருள்பாலித்து வரும் மந்திராலய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்துக்கு வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விஜயீந்திர தீர்த்த சுவாமிகள், மந்திராலய ராகவேந்திர சுவாமிகளின் பரமகுரு ஆவார். விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் 401-ம் ஆண்டு ஆராதனை விழா கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை பூர்வாரதனையுடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு புனர் பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இந்த விழாவில், மந்திராலய ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி 108-வது சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் கலந்துகொண்டு, மிருத்திகா பிருந்தாவனத்தின் விமானத்துக்கு புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்வித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய விழாவான மத்ய ஆராதனை விழா வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 15-ம் தேதி உத்தர ஆராதனையுடன் விழா நிறைவடைய உள்ளது.
ஆராதனை விழா நிகழ்ச்சிகளில் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி 108-வது சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் கலந்து கொண்டு மூலராமர் பூஜைகளை செய்து பக்தர்கள்குக் அருளாசி வழங்கி வருகிறார். ஆராதனை விழாவை முன்னிட்டு அதிகாலை விஸ்வரூபதரிசனம், நிர்மால்ய தரிசனம், அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள், வேதகோஷங்கள் முழங்க பக்திப் பாடல்கள் பாடப் பெற்று அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை மற்றும் இரவு கர்நாடக இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், புரந்தரதாஸர் கீர்த்தனைகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் செய்து உள்ளனர்.