கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்துக்குச் சொந்தமான அகோர வீரபத்திரசுவாமி கோயிலில் பிப். 12ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சிவபெருமானிடம் கங்கா தேவி ஆன்மாக்கள் தன்னிடம் கழித்த பாவச் சுமையைப் போக்க வேண்டி நின்றாள். அதற்கு சிவபெருமான் கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் மகாமக நாளில் நீராட பாவங்கள் நீங்கும் எனக் கூறி, கங்கை முதலான புண்ணிய நதிகளுக்கு துணையாக தக்கனின் வேள்வியை அழித்த ஈசனின் அம்சமான வீரபத்திரரை உடன் அனுப்பி வைத்தார்.
நவகன்னியருடன் பூமிக்கு வந்தடைந்த வீரபத்திரர் சுவாமி மகாமக குளக்கரையின் வடகரையில் எழுந்தருளியபோது, சிவபெருமானே குருமூர்த்தியாக எழுந்தருளி அகோர வீரபத்திரருக்கு தீட்சையும், இலிங்கதாரணமும், ஆச்சாரிய அபிஷேகமும் செய்வித்து, வீரசிங்காதன பீடத்தில் அமர்த்தி, வீரசைவ குருவருளைக் கொண்டு வீரசைவத்தை உலகத்தில் பரப்ப அருளாணை வழங்கினார் என்பது புராண வரலாறு.
அதன்படி கும்பகோணத்தில் கோயில் கொண்டுள்ள அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வரும் 12 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மயிலம் பொம்மபுர வீரசைவ ஆதீனத்தின் 20ஆவது பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.