மாட்டு இறைச்சி மீதான தடையைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் ஜூன் 14-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏஐடியுசி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியுசி தொழில் சங்க நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மத்திய அரசு அண்மையில் மாட்டு இறைச்சி மற்றும் மாடு வளர்ப்பது, விற்பது உள்ளிட்ட விஷயங்களில் ஏழை விவசாயிகளுக்கு விரோதமாக தடை விதித்துள்ளதைக் கண்டித்தும், சென்னையில் முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி மறுத்தும், தடையை மீறி நடத்தியதற்காகக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் தலைவர்களைக் கைது செய்ததைக் கண்டித்தும், விவசாயத்தையும், விளைநிலங்களையும் பாதுகாக்கப் போராடிய கதிராமங்கலம் மக்கள் மீதும், தலைவர்கள் மீதும் பொய் வழக்குப் பதிந்து, கைது செய்தது உள்ளிட்ட ஜனநாயகத்துக்காகப் போராடுகிறவர்கள் மீது பரவலாக நடத்தப்படுகிற காவல் துறையினர் அடக்கு முறையைக் கண்டித்தும் ஜூன் 14-ம் தேதி தஞ்சாவூர் ரயிலடி முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ. சேவையா தலைமை வகித்தார். மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், துணைப் பொதுச் செயலர் கே. ரவி, மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், பொருளாளர் தி. கோவிந்தராஜன், துணைச் செயலர் துரை. மதிவாணன், தெருவோர வியாபாரிகள் சங்கச் செயலர் ஆர்.பி. முத்துக்குமரன், அரசுப் பணியாளர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் என். பாலசுப்பிரமணியன், வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஜி. கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.