உர விற்பனையில் முறைகேடுகளைத் தடுக்க உர விற்பனையாளர்களுக்கு நவீன கருவி வழங்கப்படுகிறது என்றார் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர். கிருஷ்ணகுமார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்ற உர விற்பனையாளர்களுக்கு உர விற்பனையில் முறைகேடு மற்றும் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான பாயிண்ட் ஆப் சேல் என்ற நவீன கருவி குறித்த பயிற்சி முகாமில் அவர் பேசியது:
உர விற்பனையில் முறைகேடுகளைத் தடுக்கவும், உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுப்பதற்கும் தனியார் உர விற்பனையாளர்களுக்கும், கூட்டுறவு சங்கச் செயலர்களுக்கும் ரூ. 25,000 மதிப்புள்ள பாயிண்ட் ஆப் சேல் என்ற நவீன கருவி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் கிருஷ்ணகுமார்.
வேளாண்மை துறை துணை இயக்குநர் ஆ. சங்கர் பேசியது:
அரசு வழங்கும் உர மானியம் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடையும் விதமாக நேரடி உர மானிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, உரம் வாங்க ஆதார் எண் அவசியமாகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாக ஆதார் அட்டை உள்ள சில்லறை உர விற்பனையாளர்களுக்கு மட்டுமே உரம் விநியோகம் செய்ய இயலும் என்றார் அவர்.
வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கோ. வித்யா, மாநில இடுபொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர் மோகன், தஞ்சை மாவட்ட இடுபொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.