தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 9 ஆண்டுகளாக இலவச ஆம்புலன்ஸ் சேவை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சேவையை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தவிர, ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவித்தொகையும் வழங்கி வருகின்றனர். அதிரை தமுமுகவின் இச்சேவையை பாராட்டி லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் முகமது அசார் என்பவர் இறந்தவர் உடலை வைப்பதற்கான குளிரூட்டும் பேழை வாங்குவதற்காக அதிரை தமுமுக கிளைக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அனுப்பியுள்ளார்.
அவர் அளித்த நன்கொடையில் வாங்கப்படும் சடலம் வைப்பதற்கான குளிரூட்டும் பேழை அதிராம்பட்டினம் கடைத்தெருவில் உள்ள தமுமுக அலுவலகத்தில் வைக்கப்படும் என்றும் இதை அனைத்து சமுதாய மக்களும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தமுமுக அதிரை கிளை அறிவித்துள்ளது.