திருவையாறு அருகே வேனை மறித்து விற்பனையாளரை  வெட்டி ரூ. 1.75 லட்சம் கொள்ளை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை நள்ளிரவு வேனை வழிமறித்த மர்ம நபர்கள் விற்பனையாளரை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை நள்ளிரவு வேனை வழிமறித்த மர்ம நபர்கள் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ. 1.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கும்பகோணத்தில் உள்ள புகையிலை நிறுவனத்திலிருந்து புகையிலை ஏற்றப்பட்ட வேன்,  அரியலூர் மாவட்டத்துக்குச் சென்றுவிட்டு, மீண்டும் சனிக்கிழமை நள்ளிரவு திருவையாறு பகுதி வழியாகத் திரும்பியது. திருவையாறு அருகே புனல்வாசல் பகுதியில் வந்த இந்த வேனை பின்னால் வந்த கார், இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் மறித்தனர்.
வேனில் இருந்த தஞ்சாவூர் சோழன் நகரைச் சேர்ந்த விற்பனையாளர் எம். அப்துல்லத்தீப்பை (37) அரிவாளால் வெட்டினர். மேலும், அவர் வைத்திருந்த ரூ. 1.75 லட்சம் ரொக்கத்தைப் பறித்துக் கொண்ட மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதில், பலத்தக் காயமடைந்த அப்துல் லத்தீப் திருவையாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் குலசேகரன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் பப்பி நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டது. ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவுக்குச் சென்ற நாய் சாலையோர பாலச் சுவர் அருகே நின்றுவிட்டு, மீண்டும் நிகழ்விடத்துக்குத் திரும்பியது. தடயவியல் நிபுணர்கள்  ரேகைகளைப் பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com