டிடிவி. தினகரன் விரைவில் தனிக்கட்சியை அறிவிப்பார் என அவரது ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான தங்க. தமிழ்செல்வன் கூறினார்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காவிரி விவகாரத்திற்காக கர்நாடக முதல்வரை சந்திப்பது என்பது ஒரு நாடகம். ரஜினிகாந்த் நல்ல நடிகர். அவர் காவிரி பிரச்னை உள்ளிட்ட மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்காமல் இருந்து வருகிறார். அவரை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் இன்னும் 10 நாள்களுக்குள் தீர்ப்பு வரும். அதன் பின்னர், நாங்களும் சட்டப்பேரவைக்கு செல்வோம். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வேண்டுமானால் நடத்தலாம். ஆனால் பட்ஜெட் தாக்கல் நடைபெறாது.
அதிமுக அம்மா அணி என்ற பெயரிலும், குக்கர் சின்னத்தில் போட்டியிடவும் அனுமதி கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்காக தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் தனிக்கட்சியை டிடிவி. தினகரன் அறிவிப்பார். தினகரன் தலைமையில் நல்லாட்சி அமையும் என்றார் தங்க. தமிழ்ச்செல்வன்.