காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையிலான புதிய அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் திங்கள்கிழமை முதல் வாரம் இருமுறை பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, காரைக்குடியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில் பட்டுக்கோட்டைக்கு முற்பகல் 11.45 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என்.ஜெயராமன், சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் ஏ.ஆர்.வீராசுவாமி, தமிழ்ச் சங்கச் செயலர் ந.மணிமுத்து உள்ளிட்டோர் பயணிகளையும், ரயில்வே அலுவலர்களையும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பின்னர், பட்டுக்கோட்டையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பயணிகள் ரயில் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றது.
வாரத்தில் இருமுறை மட்டும்... இந்த வழித்தடத்தில் ஜூலை மாதத்தில் இருந்து 3 மாதங்களுக்கு வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய 2 நாள்கள் மட்டும் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் அதிருப்தி... பட்டுக்கோட்டைக்கு வந்திறங்கிய பயணிகள் காரைக்குடி-பட்டுக்கோட்டைக்கு ரயிலை இயக்க சுமார் 6 மணி நேரம் எடுத்துக் கொள்வது மிக அதிகமாக உள்ளது என்றனர். இதற்கு பதிலளித்த ரயில்வே அதிகாரிகள் விரைவில் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும் என்று தெரிவித்தனர். பயண நேரம் அதிகம் என்பதால் மிக குறைவானவர்களே ரயிலில் பயணித்தனர். இவர்களும் மகிழ்ச்சியின்றி அதிருப்தியுடன் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியதை காண முடிந்தது.