கும்பகோணம் அருகே முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தேர்தலை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் தலைமையிலான விவசாயிகள், கும்பகோணம்
உதவி ஆட்சியர் பிரதீப்குமார், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மாரீஸ்வரன் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவின் விவரம்:
தேவனாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.30 லட்சம் முறைகேடுகள் நடந்துள்ளதாக விவசாயிகள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது. இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்குதல் உள்ளிட்ட பலவற்றில் விவசாயிகளுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கும் பெருமளவில் நிதியிழப்பு, மோசடி ஏற்பட்டிருப்பதால் உடனடியாக தீவிர ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முறைகேடுகள் தனிப்பட்ட நபரால் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதில் தொடர்புடைய வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து நிதியினை வசூல் செய்வதுடன், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
முறைகேடு நடந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கூட்டுறவு சங்க தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து இந்த மனுவை பெற்றுக் கொண்ட உதவி ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.