"சர்கார்' படத்துக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், கும்பகோணத்தில் சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூரில் ஜீ.வி. வளாகம், ஜூபிடர் திரையரங்கத்தில் சர்கார் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஜூபிடர் திரையரங்கம் முன் வெள்ளிக்கிழமை காலை திரண்ட அதிமுகவினர், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர்தான் திரையிடப்படும் என திரையரங்கத் தரப்பில் கூறியதையடுத்து, அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
பின்னர், ஜீ.வி. திரையரங்கம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், அதிமுக முன்னாள் தொகுதி செயலர் துரை. திருஞானம் தலைமையில் பகுதிச் செயலர்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூர்த்தி, எஸ். ரமேஷ், எஸ். சரவணன், ஒன்றியச் செயலர் துரை. வீரணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகேயுள்ள திரையரங்கம் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சர்கார் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ள வசனங்களை நீக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் ராம. ராமநாதன், ஒன்றியச் செயலர் க. அறிவழகன் தலைமை வகித்தனர். அப்போது, முன்னாள் நகரச் செயலர் ஏ. ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியச் செயலர் அழகு. த. சின்னையன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கோவி. மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி, தஞ்சாவூர், கும்பகோணத்தில் சர்கார் திரையிடப்பட்ட திரையரங்கங்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.