வெண்டையம்பட்டி ஊராட்சியில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பூதலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்டையம்பட்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தனி நபர் இல்லக் கழிப்பறைத் திட்டம், குடிநீருக்காக ஆழ்குழாய் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகப் புகார் தெரிவித்து, பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட பிறகும், அனைத்து ஊழல்களையும் மூடி மறைக்கும் நோக்குடன் செயல்படுவதாக அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அக்கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலர் பி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.பி. முத்துக்குமரன், கே. செந்தில்குமார், எம். காமராஜ், கே. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.