தேர்தல் தோல்வி பயத்தால் திமுகவினரின் வீடுகளில் பாஜக அரசு சோதனை நடத்துகிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.
கும்பகோணத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் செ. ராமலிங்கத்துக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற மோசமான ஆட்சியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மோடி அலை வீசுகிறது என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு முடிவு கட்ட சரியான நேரம் ஏப். 18-ம் தேதி.
மோடிக்கு வட மாநிலங்களில் தோல்வி பயம் உள்ளது. தென் மாநிலங்களிலும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இவற்றுக்குப் பயந்துதான் தேர்தல் நேரத்தில் ரெய்டு என்ற பெயரில் துரைமுருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் மத்திய பாஜக அரசு சோதனை நடத்துகிறது. நம் நாட்டு அரசியல் கட்டமைப்பு வலுவானது. யாரும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆனால், பிரதமர் மோடி இந்தக் கட்டமைப்பைச் சீர்குலைத்து விட்டார். எனவே, தேர்தலில் மோடிக்கு சரியான பாடம் புகட்ட மதசார்பற்ற வேட்பாளர் செ. ராமலிங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் பாலகிருஷ்ணன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கும்பகோணம் நகரச் செயலர் கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், திமுக வடக்கு மாவட்டச் செயலர் சு. கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் தமிழருவி, மதிமுக விவசாய அணி தலைவர் ஆடுதுறை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.