தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்காகப் பொது பார்வையாளர்களின் கீழ் நுண் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 102 பதற்றமான வாக்குச் சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆட்சியரகத்தில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில், 140 நுண்பார்வையாளர்களுக்கு மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் (பொது) எம். ஜெகதீஸ்வர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, நுண் பார்வையாளர்கள் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைக் காட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி பொது பார்வையாளர் நரேந்திர சங்கர் பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனி செளந்தர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.