தஞ்சாவூர் அருகே பெண் காவலரிடம் செவ்வாய்க்கிழமை மாலை தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தைச் சேர்ந்த ரமேஷின் மனைவி கலா (36). இவர் கிழக்குக் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீடு கிழக்குக் காவல் நிலையம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பில் உள்ளது. இவர் மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்கூட்டரில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தார். துறையுண்டார்கோட்டையில் சென்றபோது, பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், இவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.