பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கடைவீதியில் தஞ்சை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் பொன்.முருகேசன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வாக்காளர்களிடையே அவர் பேசியது: நான் வெற்றி பெற்றால் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வேன். முசிறி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவேன்.
வடுகன்குத்தகை பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்துத் தருவேன். ஆலத்தூர் அரசுப் பள்ளி விளையாட்டுத் திடலைச் சுற்றி பார்வையாளர்கள் அமருவதற்காக கேலரி அமைத்துத் தருவேன் என்றார். பிரசாரக் கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர் வீ.அண்ணாமலை தலைமை வகித்தார். கட்சியின் மாநில அமைப்புச் செயலர் சு.பாஸ்கர், மாநில ஜெ.பேரவை துணைத் தலைவர் எஸ்.டி.எஸ்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர்
மா.சேகர், ஆலத்தூர் கிளை நிர்வாகிகள் தவக்குமார், லெ.பூவேந்திரன், அ.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.