சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உண்டியல்கள் மூலம் ரூ.75.50 லட்சம் மற்றும் தங்க, வெள்ளி நகைகள் கிடைத்திருப்பதாக கோயில் இணை ஆணையர் பெ. அசோக்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தின் சக்திதலங்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமல்லாது, நாட்டின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் உண்டியல் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். நிகழ் மாதத்துக்கான உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி, மாரியம்மன் கோயில் இணை ஆணையர் பெ. அசோக்குமார் தலைமையில், உதவி ஆணையர்கள் ப.ராணி, டி. விஜயராணி, கோயிலின் மேலாளர் இரா.ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உண்டியல்கள் மூலம் ரூ.75.50 லட்சம் ரொக்கம், 1 கிலோ 521 கிராம் தங்கம், 7 கிலோ 744 கிராம் வெள்ளி, 103 வெளிநாட்டு நோட்டுகள் கிடைத்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.