கும்பகோணத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) பயனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
இதில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கிளை மேலாளர் ருத்ராபதி பேசியது:
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தில் சேர்ந்த நாள் முதல் தொழிலாளியும் அவரது குடும்பமும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் இலவச மருத்துவச் சிகிச்சைப் பெறலாம்.
இத்திட்டத்தில் சேர்த்து ஆறு மாதம் நிறைவு பெற்று ஒரு பங்களிப்பு காலத்தில் 78 நாள்கள் சந்தா செலுத்தி இருந்தால் உயர் சிகிச்சைக்குத் தகுதியாகிறார். இந்தத் திட்டத்தில் சேர்ந்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டு பங்களிப்பு காலத்தில் தலா 78 நாட்கள் சந்தா செலுத்தி இருந்தால் தொழிலாளி குடும்பத்தினர் உயர் சிகிச்சைக்குத் தகுதியாகின்றனர்.
மேலும் நீண்ட நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குத் தொடர்ந்து 730 நாள்கள் வரை 80 சதவீத ஊதியத்துடன் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி விடுப்பில் இருக்கலாம் என்றார் அவர்.
கும்பகோணம் ராயாஸ் ஹோட்டல் மேலாளர் சரவணன் உள்பட 50-க்கும் அதிகமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.