தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும். நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள பெரிய ஜவுளிக் கடைகள், உணவு நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நேர்மையாக, நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், பெரிய ஜவுளிக் கடைகளில் நூறு சதவீத வாக்களிப்பு குறித்து அச்சடிக்கப்பட்ட விளம்பரத்துடன் பைகள் வழங்கப்பட்டது. இதில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) இர. கவிஅரசு, தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அன்பழகன், தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.