மக்கள் நல அரசாக மாநில அரசுச் செயல்படுகிறது என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜன், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் பேசியது:
தஞ்சை மக்கள் அளிக்கும் வாக்கு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். மக்கள் நல அரசாக மாநில அரசுச் செயல்படுகிறது. ஒத்தக் கருத்துடைய அதிமுக, பாஜக அரசு வெற்றி பெற்றால், நல்லத் திட்டங்கள் தொடரும். தஞ்சாவூர் மாநகராட்சி பொலிவுறு நகராக வளர்ந்துள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் தமாகா வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் அளிக்கும் வாக்கு. ஏழை மக்களின் நலன் காக்கும் அரசு அதிமுக அரசு. அரசின் திட்டங்கள் தொடர மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கும், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காந்திக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் வாசன். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ரயிலடி வரை அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது, தமாகா மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் சந்திரசேகர மூப்பனார், எஸ். சுரேஷ் மூப்பனார், பொதுக் குழு உறுப்பினர் சுதாகர் மூப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.