தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள பருத்திக்குடியில் புதன்கிழமை விவசாயிகள் நல்லேர் கட்டி வயல்களில் வழிபாடு நடத்தினர்.
திருவையாறு அருகே பருத்திக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் நல்லேர் கட்டி விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு புதன்கிழமை இவ்விழா நடைபெற்றது. இதில், விவசாயிகள் தங்களது மாடுகளுக்குச் சந்தனப் பொட்டு வைத்து அலங்கரித்து, ஏர் கலப்பையில் கட்டி உழுதனர்.
விளைநிலத்தில் கணபதி பூஜை, சூரியநாராயண பூஜை, வருண பூஜை, பூமி பூஜை செய்து வழிபட்டனர். அப்போது, விவசாயத்துக்குப் பயன்படும் நெல், பயறு, எள் போன்ற தானியங்களை வயல்களில் தெளித்தனர். மேலும், அதிக மகசூல் கிடைக்கவும், நீர்நிலைப் பெருகவும் பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.