பெருமகளூரில்  மோடி கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூரில் மோடி கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூரில் மோடி கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
பெருமகளூரில் இடுபாடுற்று கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அப்போது,  கோயில் வளாகத்தில் புதையுண்டு கிடந்த கல்வெட்டு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், தொல்லியல் ஆய்வாளருமான மணி. மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன், வை. இராமமூர்த்தி ஆகியோருடன் அவ்வூருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுபற்றி மணி. மாறன் தெரிவித்தது:
களப்பணியின்போது சோமநாதர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பதும், குலோத்துங்க சோழனாலும், பாண்டிய மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டதும் தெரிய வந்தது. பின்னர், தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னனான பிரதாபசிம்மன் காலத்தில் கொடை அளிக்கப்பட்ட செய்தியைக்கூறும் மராத்தி மொழி மற்றும் மோடி எழுத்திலமைந்த கல்வெட்டே தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 
இக்கோயில் சோழர் காலக் கோயில் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அக்கோயிலுக்கு நேர் எதிராக காவிரிக் குடிநீர்த் திட்டத்துக்காகக் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றபோது நடராஜர், விநாயகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் புதையுண்டிருந்து, கண்டெடுக்கப்பட்டது. இவை தற்போது தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சோழ நாட்டில் முதலாம் இராஜராஜனால் உருவாக்கப்பட்ட வளநாடுகள் பலவற்றை முதலாம் ராஜேந்திரசோழன் மேலும் பல வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்தான். அவற்றுள் பாண்டிய குலாசனி வளநாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பெற்ற ஜெயசிங்க குலகால வளநாட்டில் அடங்கிய ஒரு பேரூரே பெருமுள்ளூர் என்னும் ஊராகும். அன்று பெருமுள்ளூர் என்றழைக்கப்பட்ட இவ்வூர் பெயர் மருவி இன்று பெருமகளூர் என அழைக்கப்படுகிறது.
வரலாற்றில் இவ்வூர், பெருமுள்ளூரான குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலம் எனக் குறிக்கப்படுகிறது. குலோத்துங்க சோழன் காலத்துக்கு (கி.பி. 1070  1125) முன்னதாகவே இராஜராஜனால் இச்சிவாலயம் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். நம் வரலாற்றில் பல்வேறு சான்றுகள் மறைந்தும் புதைந்தும் கிடப்பதால் பல செய்திகளை வெளியுலகு அறிய இயலாமல் போய் விடுகிறது. கோயிலோடு இணைந்து திகழும் பெருங்குளமான தாமரைக்குளத்தின் நீர் வெளியேறும் அமைப்பும், கட்டுமானமும் இராஜராஜன் காலத்துப் பாணியைக் காட்டுகின்றன.
பாண்டிய மன்னர்களால் இவ்வூரும்,  இங்கு திகழும் கோயில்களும் போற்றப்பட்டுள்ளன. பாண்டிய நாட்டின் எல்லையான வெள்ளாற்றின் அருகே இவ்வூர் அமைந்துள்ளதே இதற்குக் காரணம். இங்குக் கிடைத்த கல்வெட்டு காலத்தால் முந்தைய குலோத்துங்க சோழனின் கல்வெட்டாகும். பல்வேறு காரணங்களால் பிற கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிந்துள்ளன.
இங்கு புதிதாகக் கண்டறியப்பட்ட மராத்திய மொழியின் ஒரு வடிவமான மோடி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் (கி.பி. 1739  1763) காலத்தில் வெட்டப்பட்டதாகும். இக்கல்வெட்டில் சாலிவாகன சகாப்தம் 1674 என்றும்,  கலி ஆண்டு 4854 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இக்கல்வெட்டு வெட்டப்பெற்ற ஆங்கில ஆண்டு கி.பி. 1753 ஆகும்.
இக்கல்வெட்டுச் சாசனத்தில் செப்பேடு மற்றும் ஓலைச்சுவடிகளில் காணப்படுவதுபோன்று முத்திரை இடப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மேலும்,  சூரிய, சந்திரரைக் குறிப்பிடும் வட்டமும் பிறையும் வெட்டப்பட்டுள்ளது. மராத்தி மோடி எழுத்துகள் கலந்து காணப்படும் இக்கல்வெட்டு பிரதாபசிம்மன் பெருமுள்ளூர் சிவாலயத்துக்கு வழங்கிய கொடையை விவரிக்கிறது.
கிட்டத்தட்ட 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் பக்கவாட்டில் இதே செய்தி, தமிழிலும் வெட்டப்பட்டுள்ளது. 
ஆனால்,  தமிழ்ப்பகுதி மிகவும் சிதைவுற்று இருப்பதால்,  படித்தறிய முடியாத நிலையில் உள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்துக் கோயிலில் கிடைத்துள்ள மராத்தி மொழி மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு இதுவே என்றார் மணி. மாறன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com