தஞ்சாவூர் மாநகரில் சாலையில் கொட்டி வைத்திருக்கும் கட்டுமானப் பொருட்களை வரும் ஆக.15-க்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என்றார் மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 1 முதல் 51 வரையிலான வார்டுகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் வீடு பராமரிப்போரால் மற்றும் புதிய வீடு கட்டுபவர்களால் கட்டுமானப் பொருட்கள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.
இதனால், மாநகரில் விபத்து ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஏற்படுகிறது. எனவே, ஆக. 15-க்குள் மாநகரில் சாலையில் கட்டுமானப் பொருட்களைக் கொட்டி வைத்திருப்பவர்கள் தாங்களே முன் வந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறுபவர்களின் ஆக்கிரமிப்பு மாநகராட்சியால் அகற்றப்படுவதுடன், அகற்றிய கட்டுமானப் பொருட்கள் கையகப்படுத்தப்படும். இதற்கான செலவுத்தொகை தொடர்புடைய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு சட்ட ரீதியான தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படும்.