தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர ஆகஸ்ட் 24ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் தொடர் மற்றும் விரிவாக்கக் கல்வித் திட்ட மையத் தலைவர் ஆர். அனந்தராமன் தெரிவித்திருப்பது:
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான சாஸ்த்ரா அகாதெமி பார் குரோத் அன்டு எக்ஸலன்ஸ் என்ற இலவச பயிற்சி மையம் 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந் நிறுவனத்தின் மூலம் வங்கிகள் மற்றும் மத்திய, மாநில தேர்வாணையக் குழுக்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு சிறந்த முறையிலும், இலவசமாகவும் நடத்தப்படுகிறது. இதில், சென்னையிலிருந்து சிறப்பு அழைப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த அமைப்பின் சார்பில் நிகழாண்டு யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடங்கப்படவுள்ளது. அதற்கான நுழைவுத் தேர்வு இப்பல்கலைக்கழக வளாகத்தில் 2019 ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இத்தேர்வில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பெயர், தொலைபேசி எண், வீட்டு முகவரி, மின்னஞ்சல் ஆகியவற்றை தலைவர், தொடர் மற்றும் விரிவாக்கக் கல்வித் திட்ட மையம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ அல்லது 04362 - 264104 விரிவாக்கம் 2195 என்ற தொலைபேசி எண்ணிலோ ஆக. 23-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.