பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், மருத்துவகுடி கிராமம், தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி ரமேஷ் (40). இவருக்கு திருமணமாகி உஷாராணி (35) என்ற மனைவியும், ஐஸ்வர்யா (15), தீபிகா (13) என 2 மகள்களும் உள்ளனர்.
குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அண்மையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, மகள்களுடன் உஷாராணி கும்பகோணம் அருகேயுள்ள கொட்டையூர் கிராமத்திலுள்ள அவரது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் மர்மமான முறையில் ரமேஷ் இறந்து கிடந்தாராம். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் போலீஸார், ரமேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக உஷாராணி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.