பேராவூரணியிலுள்ள கூட்டுறவு வங்கி கிளையின் முகப்பு மேற்கூரை செவ்வாய்க்கிழமை பெயர்ந்து விழுந்தது.
பேராவூரணியில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை கடைவீதியில் உள்ளது. இந்த வங்கிக்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்களும், ஆசிரியர்களும் வங்கி பணிகளுக்காக வந்து செல்வது வழக்கம்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வங்கியின் முன்பக்கம் உள்ள மேற்கூரை (சன்ஷேடு) திடீரென பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் அந்த பகுதியில் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தை மராமத்து செய்ய வேண்டுமென வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.