தஞ்சாவூர் மேம்பாலம் அருகேயுள்ள குளத்தில் தூர்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் சாலையில் மேம்பாலம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான குளம் உள்ளது. இக்குளம் பல ஆண்டுகளாகத் தூர்வாராமலும், ஆக்கிரமிப்புகளாலும் குட்டை போல காணப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாநகராட்சி பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை தூர்வாரும் பணி தொடங்கியது.
இப்பணியை மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன் தொடங்கி வைத்தார். நகரமைப்பு அலுவலர் தயாநிதி, துணை நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், இளநிலைப் பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், ஆறுமுகம், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏறத்தாழ 20,000 சதுர அடி பரப்பளவை கொண்ட இக்குளம் முழுவதும் தூர்வாரப்படவுள்ளது. குளத்தின் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10-க்கும் அதிகமான வீடுகள் அகற்றப்படும் என்றும், மழை பெய்தால் சாலையில் வீணாகச் செல்லும் மழை நீர் இக்குளத்தில் சேகரிக்கப்படும் எனவும், இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.