தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.16) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் பல்வேறு பணியிடங்களுக்குப் பணி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. இதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலைப் பட்டம் படித்தவர்கள் (வயது 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம்.
இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை) மற்றும் இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இந்தப் வாய்ப்பைத் தவறவிடாமல் ஆக. 16-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் சென்று பயன் பெறலாம்.