பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் நா. பழனிவேல் தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் பேரணியை தொடங்கி வைத்து பேசினார். நீலகண்ட பிள்ளையார் கோயிலிலிருந்து தொடங்கிய பேரணி, பிரதான சாலை வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டபடியும் மாணவர்கள் சென்றனர். பேரணியின் முடிவில், பேராவூரணி ரயில் நிலையத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர். பேரணியில் உதவி பேராசிரியர்கள் முத்துகிருஷ்ணன், சண்முகபிரியா, விமலா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.