தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ரூ. 2000 கள்ளநோட்டு மாற்றிய இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர் .
சேதுபாவாசத்திரம் காவல் சரகம் செந்தலைப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் முகமதுயாசின். இவரது கடைக்கு வெள்ளிக்கிழமை பைக்கில் வந்த இருவர் ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து சிகரெட் வாங்கிக் கொண்டு மீதித் தொகையைப் பெற்றுக்கொண்டு கட்டுமாவடி நோக்கிச் சென்றுவிட்டனர்.
முகமதுயாசின் அந்த ரூபாயை அருகில் உள்ளவர்களிடம் காண்பித்தபோது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இந்நிலையில் பைக்கில் சென்ற இருவரும் மீண்டும் அதே வழியில் திரும்பிவந்தபோது கடைவீதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மடக்கிபத் பிடித்தது விசாரித்தனர்.
அவர்கள் மன்னார்குடி ஆர்.பி.சிவம்நகரைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் (26), மதுக்கூர் அருகேயுள்ள கன்னியாகுறிச்சி கலிச்சான்கோட்டையைச் சேர்ந்த மெக்கானிக் விஜய் (22) என்பதும், கள்ளநோட்டுகளை மன்னார்குடி திருமாக்கோட்டையை சேர்ந்த மாதவன் என்பவர் கொடுத்து மாற்றச் சொன்னதாகவும் கூறினர். பல்வேறு இடங்களில் இதேபோல கள்ள நோட்டுகளை மாற்றியதாகவும் கூறினர். இதையடுத்து அவர்கள் கைவசம் இருந்த மேலும் நான்கு 2000 ரூபாய் கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்த பொதுமக்கள் சேதுபாவாசத்திரம் போலீஸில் அவர்களை ஒப்படைத்தனர். சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் வீர. அண்ணாதுரை இருவரையும் கைது செய்து விசாரித்து வருவதுடன் கள்ள நோட்டு கும்பலையும் தேடி வருகிறார்.