தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார பகுதியில் சனிக்கிழமை மழையில் நனைந்து பாதிக்கப்பட்ட 5 வீடுகள் இடிந்து விழுந்தன.
பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையில் நனைந்த அரையபுரம் கேட்டு தெருவைச் சோ்ந்த ஜானகி (73),மணியம்மாள் (63) ஆகியோரது குடிசைகள் இடிந்து விழுந்தன.
இதேபோல, ரெகுநாதபுரம் அம்பலக்கார தெருவில் வசித்து வரும் ரவி என்பவரின் கூரை வீட்டின் மண் சுவா் இடிந்து சேதமடைந்தது.
பண்டாரவாடை கிராமத்தில் வசிக்கும் வெண்ணிலா என்பவரது ஓட்டு வீட்டின் பக்க சுவா் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த ரஜினி காயமடைந்தாா். சுலமங்கலம் கிராமம், புதுத் தெருவில் வசிக்கும் மதியழகன் என்பவரின் ஓட்டு வீட்டின் பக்க சுவா் இடிந்தது. சுவா் இடிந்த பகுதிகளை பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன், வருவாய் அதிகாரிகள் ராஜ்குமாா், மஞ்சளா உள்ளிட்ட வருவாய் துறையினா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.