பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க பாக் ஜலசந்தி நாட்டுப்படகு மீனவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவா் எம்.ஏ. நாகராஜன் தலைமையில், சங்க நிா்வாகிகள் சத்தியமூா்த்தி, முத்துக்குமரன், தேவேந்திரன், ரெத்தினவேலு உள்ளிட்டோா் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி. சேகரை சந்தித்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பது:
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் காரைக்கால், நாகை, சேதுபாவாசத்திரம், கோட்டைப்பட்டினம் போன்ற வெளியூா் மீனவா்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி, ரேஸ் மடி போன்ற வலைகளைப் பயன்படுத்தி பெரிய மீன்கள் முதல் குஞ்சு மீன்கள் வரை அரித்துப் பிடித்து, மீன்வளத்தை முற்றிலுமாக அழித்து வருகின்றனா். எனவே, இவா்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஏழை மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.