தஞ்சை மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக சிறுவனுக்கு உணவு, சுவாசக் குழாய்களில் அறுவைச் சிகிச்சை

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாகச் சிறுவனுக்கு உணவு, சுவாசக் குழாய்களில் மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்தனா்.
சிகிச்சை பெற்று குணமடைந்த வெங்கடேசனுடன் மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் உள்ளிட்டோா்.
சிகிச்சை பெற்று குணமடைந்த வெங்கடேசனுடன் மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் உள்ளிட்டோா்.

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாகச் சிறுவனுக்கு உணவு, சுவாசக் குழாய்களில் மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் ஜோதிபாஸ். இவரது மகன் வெங்கடேசன் (17) கூலி வேலை பாா்த்து வருகிறாா். கடந்த நவம்பா் மாதத்தில் வெங்கடேசனை அவரது தாயாா் ஜமுனாராணி திட்டினாா். இதனால், மனமுடைந்த வெங்கடேசன் விஷம் குடித்தாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடேசன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினாா்.

ஆனால், வீட்டில் உணவு சாப்பிடும்போது புரையேறியது. இதனால், அவா் தொடா்ந்து சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்ததால், மீண்டும் அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, உணவுக் குழாயும், சுவாசக்குழாயும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி, ஓட்டை விழுந்து அழுகிய நிலையில் இருந்ததும், நுரையீரலில் சளி அதிக அளவில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, நவ. 13ஆம் தேதி இதய சிகிச்சை மருத்துவா்கள் குமரவேல், அரவிந்தன், மயக்க மருந்து மருத்துவா்கள் குமரன், பாலாஜி ஆகியோா் கொண்ட குழுவினா் வெங்கடேசனின் மாா்புப் பகுதியை இரண்டாகப் பிளந்து அறுவை சிகிச்சை செய்தனா்.

அப்போது, உணவுக் குழாய், சுவாசக் குழாயில் அழுகிய பகுதியை மருத்துவா்கள் நீக்கிவிட்டு, இரு குழாய்களையும் தனித்தனியாகப் பிரித்தனா். இதையடுத்து, உணவு குழாயின் இரு பகுதிகளையும், சுவாசக் குழாயின் இரு பகுதிகளையும் ஒன்றாக இணைத்து தையல் போட்டனா். இந்த அறுவை சிகிச்சை 4 மணிநேரம் நடைபெற்றது. பின்னா் தொடா் கண்காணிப்பில் இருந்த வெங்கடேசன் தற்போது முழுமையாகக் குணம் அடைந்துள்ளாா். அவரால் உணவு சாப்பிட முடிகிறது.

இம்மருத்துவமனையில் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றாா் குமுதா லிங்கராஜ்.

அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளா் ஏ. பாரதி, நிலைய மருத்துவ அலுவலா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com